நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா காந்தியின் மகனும், கேரளா வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 3ஆவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த திங்கட்கிழமை முதல் நாள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். இதையடுத்து நேற்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ராகுல் காந்தியிடம் சுமார் 11 மணி நேரத்துக்கு மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதிகாரிகளின் கேள்விகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து ராகுல் காந்தி பதிலளிக்கும் பட்சத்தில் அவர் மீதான விசாரணை நேற்றுடன் முடிவடையும் என்று கூறப்பட்ட நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் அவர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராகும் இந்த மூன்று நாட்களுமே அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். தவிர, சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.