பெங்களூரு : பெங்களூரு விதானசவுதா எதிரே கர்நாடக ஐகோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐகோர்ட்டில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைனில் நேரடி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி-வெங்கடலட்சுமி தம்பதியின் மகள் காயத்திரி (வயது 25) கலந்துகொண்டார். இந்த நிலையில் ஐகோர்ட்டின் சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பங்காருபேட்டையை சேர்ந்த காயத்திரி தேர்ச்சி பெற்றுள்ளார். விரைவில் இவர் ஐகோர்ட்டு சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
இளம்வயதிலேயே ஐகோர்ட்டு சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள காயத்திரி, பங்காருபேட்டை அருகே காரஹள்ளியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த காயத்திரி கடின உழைப்பால் இன்று சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார்.