புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய விசைப் படகு மீன்பிடி இறங்குதளங்களில் இருந்து நேற்று 300 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 23 பேரை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 221 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழகத்தின் 105 மீன்பிடி படகுகள் தற்போது இலங்கைவசம் உள்ளன. தொடர் முயற்சிகளின் காரணமாக, கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களது மீன்பிடி படகுகள் இன்னும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
எனவே, நமது மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்கவும், தற்போது இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், உடனடியாக விடுவிக்கவும் தேவையான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட மீனவர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.