புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ‘துடிப்பான கிராமங்கள்’ திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 2022-2023 நிதி ஆண்டில் இருந்து 2025-2026 நிதி ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.4 ஆயிரத்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வடக்கு எல்லையில் உள்ள 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாழ்வாதார வாய்ப்புக்கு இத்திட்டம் வழிவகுக்கும்.
மேலும், அங்கிருக்கும் மக்கள் வேலைக்காக இடம்பெயர்வதை தடுப்பதுடன், எல்லை பாதுகாப்பை பலப்படுத்தவும் பயன்படும். இந்தியாவில் தற்போது 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில், இன்னும் இச்சங்கங்கள் தொடங்கப்படாத கிராமங்களிலும், பஞ்சாயத்துகளிலும் 2 லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மற்றும் பால்வள கூட்டுறவு அமைப்புகள், மீன்வள கூட்டுறவு அமைப்புகள் ஆகியவை அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.