15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இந்தபோட்டி டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். எனவே முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பைஅணி தனது 2ஆவது வெற்றியை இந்ததொடரில் பதிவுசெய்தது. முன்னதாக, இந்ததொடரின் அறிமுக அணியான குரஜாத் முந்தைய பஞ்சாப் உடனான ஆட்டத்திலேயே ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்ல முயன்று அது முடியாமல் போனது. இந்த முறையேனும் மும்பை அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறும் முயற்சியில் இருந்த குஜராத் அணியின் முயற்சி கைக்கூடவில்லை. எனினும் இந்ததொடரில் 11 ஆட்டங்களில் போட்டியிட்டு உள்ள குஜராத் அணி 8 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியையும் தழுவி, புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை இந்ததொடரில் விளையாடிய 10 ஆட்டங்களில் 2 ஆட்டத்தில் வெற்றியும், 8 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஆட்டங்களில் தோற்றுள்ளதால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.