புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த மையமானது, இந்தியா, நேபாளம், பூடான், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு சேவையாற்றும். இந்த விழாவின்போது பிரதமர் மோடி, பாரத் 6-ஜி தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை வெளியிட்டதுடன், 6-ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனை திட்டத்தையும் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:- அதிவேகமாக 5- ஜி தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த 120 நாட்களில் 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தியாகி விட்டது. இது நாட்டின் நம்பிக்கையைக் காட்டுகிறது. 4-ஜி தொழில்நுட்பத்துக்கு முன்பாக, தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிற நாடாக மட்டுமே இந்தியா இருந்தது. வரும் நாட்களில் 5-ஜி தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் 100 உருவாக்கப்படும். இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப 5-ஜி செயலிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவும். அதிலும் கிராமப்புறங்களில் பெரும்பான்மையோர் இணையதளம் பயன்படுத்துகிறார்கள்.
5 லட்சம் பொது சேவை மையங்கள், டிஜிட்டல் சேவைகளை வழங்குகின்றன. நமது நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரம், மற்ற பொருளாதாரத்தை விட 2½ மடங்கு வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்தியாவில் தற்போது 100 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. உலகிலேயே செல்போன்கள் இணைப்புகள் அதிகம் உள்ள ஜனநாயகம், இந்தியாதான் என கஊரியுள்ளார்.