சென்னை: தமிழக அரசின் சேவைகளை பயனாளிகளுக்கு விரைவாக, எளிதாக வழங்கும் நோக்கில், பொதுமக்களுக்கு பிரத்யேக அடையாள எண்ணுடன் கூடிய ‘மக்கள் ஐ.டி.’ வழங்குவதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. தேசிய அளவிலான ஆதார் அட்டை போல, தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது, பாலினம், சமூக அடிப்படையில் கணக்கிட்டு 10 முதல் 12 இலக்கத்திலான ‘மக்கள் ஐ.டி.’ எண் வழங்கப்பட உள்ளது.
மாநில குடும்ப தரவு தளம் (எஸ்ஆர்டிஎச்) உருவாக்கப்பட்டு, அதில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து விவரங்களை பெற்று, பயோ மெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி, அனைத்து துறைகளின் சேவைகளையும் வழங்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத் துறையால் அதற்கான அரசாணையும் 2013 நவ.29-ம் தேதி வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ், பொது விநியோக திட்டம், முதியோர் ஓய்வூதியம், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வரும் 100 நாள் வேலை, முதல்வரின் பசுமை வீடு, சுகாதாரத் துறையின் மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நலத் துறையின் நலவாரிய உதவித் தொகைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித் தொகை மற்றும் சமூகநலத்துறை, வருவாய், பதிவுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆகிய துறைகளின் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான பணிகள் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு, அடிப்படை பணிகள் நடந்து வந்தன. இதற்கான அங்கீகாரம் பெற்ற பயனர் முகமையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, ஆதார் அமைப்பிடம் பதிவு செய்தது. தொடர்ந்து, ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்’ (KYC) என்பதன் அடிப்படையில், முகவரி, குடும்ப உறுப்பினரின் பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை பெறுவதற்கான அடிப்படை பணிகளும் தொடங்கப்பட்டன. மின் ஆளுமை முகமை மூலம் உருவாக்கப்படும் மாநில குடும்ப தரவுதளம் மூலம், தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கத்திலான ‘மக்கள் ஐ.டி.’ அளிக்கப்படும். தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது, பாலினம், சமூக அடிப்படையில் கணக்கிட்டு இந்த எண் வழங்கப்பட உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த, ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல், ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழக மின் ஆளுமை முகமை ஒப்பந்தம் கோரியுள்ளது. தரவுகளை சேகரித்து இதற்கான தளத்தை நிர்வகிக்க திறமையும், அனுபவமும் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசை பொருத்தவரை, ஐஎப்எச்ஆர்எம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் மூலம், ஆன்லைன் வாயிலாக பயனாளிகளுக்கு அவர்கள் வங்கிக் கணக்குக்கே தொகைகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இது, கருவூலம் மற்றும் கணக்கு துறை வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து திட்ட பயனாளிகளையும் இணைத்து, பயனாளிகள் தங்களுக்கான சேவைகளை பெற ஏற்கெனவே ஆதார் எண்ணை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘மக்கள் ஐ.டி.’ திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.