நேபாள நாட்டில் உள்ள போகாரா என்னும் சுற்றுலா நகரில் இருந்து ஜோம்சம் நகருக்கு 22 பேருடன் தாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட 15ஆவது நிமிடத்தில் இருந்து விமான நிலைய அதிகாரிகளுடனான தொடர்பு நின்றுபோய் விமானம் மாயமானது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளுடன் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அதில், முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியின் மீது மோதி விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. அந்த இடத்தில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதுவரை 14 உடல்கள் முழுவதும் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளன. அவை காத்மண்டுவுக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் 15 பேர் அடங்கிய நேபாள ராணுவ வீரர்கள் குழு ஈடுபட்டு உள்ளது. விமான விபத்து நடைப்பெற்ற பகுதி 14,500 அடி உயரத்தில் உள்ளது. எனவே ராணுவ குழு 11,000 மீட்டர் உயரத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளதாக நேபாள ராணுவம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.