திருவள்ளூர் அருகே போலிவாக்கம் பகுதியில் தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்டர் செய்த ரூ.1.5 கோடி பொருட்கள் கண்டெய்னர் லாரி மூலம் சாலை வழியாக டெல்லிக்கு இன்று அதிகாலை மணவாளநகர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, கண்டெய்னரில் புகை ஏற்பட்டு இருப்பதை அறிந்த கண்டெய்னர் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விரைந்து வந்த மணவாளநகர் காவல்துறையினர் கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்தபோது உள்ளே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளது. சிறிது நேரத்தில் மளமளவென கண்டெய்னர் முழுவதும் தீ பற்றியதால் திருவூர் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் கண்டெய்னர் லாரியில் இருந்த ரூ.1.5 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது. சம்பவ இடத்தில் திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையிலான காவல் துறையினர் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.