தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று ‘பிலவ’ வருடம் விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று அதிகாலை முதலே நடைபெற்று வரும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான மக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தனது வீட்டின் வாசலுக்கு இன்று வந்த நடிகர் ரஜினிகாந்த் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் கோஷம் எழுப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.