திருத்தணியில் நகராட்சியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவரும் மோஹித் (14) மற்றும் நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் எட்டாம் வகுப்பு மாணவி த.லக்ஷயா (13) ஆகிய சகோதர சகோதரி இருவரும் கடந்த 5 வருடகாலமாக கடுமையாக யோகாசன பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்தநிலையில், யோகா மூலம் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையடிவாரத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்தநிகழ்ச்சியில் மலைக்கோயில் வாகனப் பாதையில் அரசு பள்ளி மாணவன் மோஹித் சக்கராசனம், உத்தாபத்மாசனம், நின்று பாதாசனம், ஆகிய யோகாசனங்களை செய்தவாறு 42 நிமிடம் 26 நொடிகளில் மலைக்கோயில் பாதையை அடைந்து சாதனைப்படைத்தார். மேலும் மாணவி த.லக்ஷயா திருத்தணி முருகன் கோயில் மலையடிவார படிக்கட்டுகள் வழியாக சக்கராசனம் செய்தவாறு 108 படிக்கட்டுகள் ஏறினார். இந்தசாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. நோபல் உலக சாதனை புத்தகத்தின் இந்தியாவின் டைரக்டர் யோகி சுதாகர், இந்த அமைப்பின் நடுவர்கள் பசுபதி, செல்வம், ஆகியோர் இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு நடுவர்களாக முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் சாதனையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர். இந்தநிகழ்ச்சியில், குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். திருத்தணியில் முதல் முறையாக யோகாசனத்தின் மூலமாக உலக சாதனை புத்தகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இடம் பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.