டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் 205.33 மீட்டர் என்ற அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் தொடங்கிய இந்த பருவமழை, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி என நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, வடக்கு-வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா, தெற்கு தீபகற்பம் ஆகிய பகுதிகளில் கடந்த 2ம் தேதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் வடக்கு-வடமேற்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 28 சதவீதம் அளவுக்கும், மத்திய இந்தியாவில் 20 சதவீதம் அளவுக்கும், தெற்கு தீபகற்பத்தில் 17 சதவீதம் அளவுக்கும் கூடுதலாக மழை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய அளவில் சராசரியாக 16 சதவீதம் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது.
வட இந்தியாவின் டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பல்வேறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்து மற்றும் ரயில் சேவைகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.