மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் 9ஆம் நாள் உற்சமான இன்று அம்மன் மரவர்ணச்சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி இருக்கிறார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி, நாளை காலை 10.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கோபுர வாசல்கள் வழியாக வருகை தரும் பக்தர்களை பலத்த சோதனைக்கு பின்பே கோவிலுக்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் அனைவரும் நாளை காலை 07.00 மணி முதல் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவு வாசல்களில் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்பு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் செல்போன் உட்பட எந்தப்பொருட்களையும் எடுத்து வர அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தவிர, திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பின்பு பக்தர்கள் வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வழியாக வெளியே செல்ல வேண்டும். பக்தர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கோவில் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.