கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் இந்த கடந்த வாரம் 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர். இந்த விடுமுறை நாள் ஒன்றில்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலினும், திருமலை சென்று ஏழுமலையானை தரிசித்தார். அவர் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தின் வழியாகச் சென்று சாமியைத் தரிசித்தார். இந்த நிலையில், தினந்தோறும் ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நீண்டவரிசையில் காத்துக் கிடக்கிறது. பக்தர்களின் வருகையை முன்னிட்டு, இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டு நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நேரம் ஒதுக்கப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்க தேவஸ்தானம் பரிசீலனை செய்து வருவதாக தேவஸ்தான தகவல்கள் தெரிவிக்கின்றன.