கோடைகாலம் என்பதால் மின்பற்றாக்குறை காரணமாக தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகமாக ஏற்படுகிறது. அதேபோல, திருவள்ளூர் மாவட்டம் மணவள நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிலதினங்களுக்கு முன்பு அடிக்கடி மின்தடை ஏற்ப்பட்டது. இதனால் பெரிதும் அவதியுற்ற அந்தபகுதி பொதுமக்கள் சிலர் ஆத்திரம் அடைந்து மணவள நகர் மின் பிரிவு அலுவலகத்தில் புகுந்து தாகுதல் நடத்தி உள்ளனர். 6 பேர் கொண்ட அந்த மர்ம கும்பல் மின் பகிர்மான அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டரின் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் அங்கு பணி புரியும் கள உதவியாளர் குப்பனின் தலையில் சரமாரியாக தாக்கியும் உள்ளனர். பிறகு, பணியில் இருந்த இளநிலை பெண் பொறியாளரை ஒருமையில் பேசி திட்டிவிட்டு இனிமேல் மின் தடை ஏற்படுத்தினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி அந்த மர்ம கும்பல் அங்கு இருந்து சென்றுள்ளனர். இதற்கிடையில், தாக்குதலினால் படுகாயமடைந்த குப்பன் இரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், காயமடைந்த குப்பனை மீட்டு மருத்துவமனை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில், சம்பவம் குறித்து, மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட பாலாஜி என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.