டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 250 உறுப்பினர்களில், தமிழகத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த ஜூன் மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதேபோல, இந்தியா முழுவதும் உள்ள 14 மாநிலங்களைச் சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. எனவே காலியாக உள்ள மொத்தம் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகளுக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடக்க இருப்பதாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைப்பெற இருக்கின்றது. இந்தத் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனையும், உதவித் தேர்தல் அதிகாரியாக, சட்டப்பேரவை துணை செயலாளர் ரமேஷையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேலும், தேர்தல் பார்வையாளராக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாஹூ செயல்படுகிறார். எனவே, வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அறையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பொது விடுமுறை நாளான 28ஆம் தேதி மற்றும் 29ஆம்தேதி ஆகிய 2 நாட்களை தவிர்த்து, வரும் 31ஆம்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை ஜூன் 1ஆம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3ஆம் தேதி ஆகும். காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், இந்தத் தேர்தலில் போட்டி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக மனுத்தாக்கல் செய்யப்பட்டால், ஜூன் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.