மனிதர்கள் எந்த விதமான சுபாவங்களைக் கொண்டிருக்கிறார்களோ அதைப் பொறுத்துத்தான் இந்த நீண்ட தனிமையின் பாதிப்பை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதைச் சொல்ல முடியும். எந்தச் சூழலையும் எதிர்கொண்டு பொறுத்துப் போகிறவர்களாக இருந்தால் இதற்கும் எளிதாக தகவமைத்துக் கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு அது பெரிய சிரமமாக இருக்காது.
நான் இருக்கும்படி தான் இருப்பேன், என் விருப்பப்படிதான் இருப்பேன் என்று ஈகோவுடன் இருப் பவர்கள், இந்த நீண்ட தனி மையை ஏற்றுகொள்ள முடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கலாம். அவர்களின் பொது ஆளுமைக்கும், அதன் வெளிப்பாடுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறது.
பெண்களைப் பொறுத்தவரை வலிய திணிக்கப்பட்ட இந்தத் தனிமை சிரமமாக இருக்காது. வீட்டுக்குள்ளே இருப்பது நம் ஊரில் பலருக்கு பழகிப் போனது என்பதால் அவர்களுக்கு அது பெரிய சிரமமாக இருக்காது. பொருட்கள், தங்களுக்குத் தேவையானவை எளிதாகக் கிடைத்தால் பெண்கள் தனிமையைப் பெரிய சுமையாகக் கருதுவதில்லை. சாதாரணக் குடும்பப் பெண்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சாதிக்கும் குணம் கொண்ட பெண்கள், வேலைக்காக வெளியில் சென்று பழகிய பெண்கள் போன்றோருக்கு இது சிரமமாக இருக்கலாம். ஆண்களுக்குத்தான் இந்தத் தனிமை மிகவும் சிரமமாக இருக்கும். வீட்டை விட்டு வெளியே போவது, வண்டி எடுத்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி வருவது என்று இருக்கும் ஆண்கள்தான் மிகவும் அவதிப்படுவார்கள். ஆணுடைய இயற்கை இயல்புக்கு எதிரானது இந்தத் தனிமை. பொதுவாக ஆண்கள் அதிகம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஒரே இடத்தில் இருப்பது அவர்களுக்கு இறுக்கம் ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் எரிச்சல் அடைவார்கள். சிடுசிடுவென்று இருப்பார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தி சரி செய்ய முடியாது. வீட்டில் இருப்பவர்கள் இதைப் புரிந்துகொண்டு அதிகமான வாக்குவாதங்களில் ஈடுபடாமல் சூழலை மென்மையாக வைத்துக்கொள்வது நல்லது.
தாங்கள் மட்டும்தான் இந்தச் சூழ்நிலைக்கு அனுசரித்துப் போக வேண்டுமா, ஆண்கள் அனுசரித்துப் போக மாட்டார்களா என்று பெண்கள் நினைப்பார்கள். ஆண்கள் புரிந்துகொள்ள மாட்டார்களா, இந்தச் சூழ்நிலைக்கு சரி செய்துகொள்ள மாட்டார்களா என்று பெண்கள் ஈகோவுடன் சிந்திக்க வாய்ப்பு இருக்கிறது.
குடும்பச் சூழலில் குடும்பத் தலைவிதான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டிய நிலை இருப்பதால் அவர்தான் சரியான நடத்தையை செயல்படுத்த வேண்டும். அப்படி இருந்தால் ஆணும் தொடக்கத்தில் கொஞ்சம் பிகு செய்துகொண்டு பிறகு சரியாக வந்துவிடுவார். அதனால் பெண்கள் ஆண்களை மிகவும் நுட்பமாக கையாள வேண்டும். ஆண் வெளியே போகிறேன் என்று சொல்லும்போது, போகாதீர்கள் என்று சொல்லாமல், சீக்கிரம் வந்துவிடுங்கள், கவனமாக இருங்கள் என்று சொல்லி அனுப்பலாம்.
ஆண்களுக்கு ஒரு தவறான அபிப்ராயம் இருக்கிறது. தங்களுக்கு கொரோனா போன்ற நோய்கள் வராது என்ற மன நிலை அவர்களிடம் இருக்கிறது. இது என்ன பெரிய விஷயம், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி ரிஸ்க் எடுக்கும் தன்மை அவர்களிடம் இருக்கும். அதனால் பெண்கள் கொஞ்சம் விட்டால் அவர்கள் அதிகமான நேரத்தை வெளியே செலவிட வாய்ப்பு இருக்கிறது. எந்த முன்னெச்சரிக்கையையும் பெண்கள் கடைப்பிடிக்கும் அளவுக்கு ஆண்கள் கடைப்பிடிப்பது குறைவு. அதனால் கோபப்படாமல், சாதுர்யமாகப் பேசி ஆண்களை பெண்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
ஆண்கள் வீட்டில் இருப்பதால், பாலியல் ரீதியில் அவர்கள் அதிக ஈடுபாட்டுடன் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஒன்றும் தடை இல்லை. இந்தச் சமயத்தில் பெண்கள் கர்ப்பம் அடையக் கூடாது என்று உலகச் சுகாதார நிறுவனம் சொல்லி யிருக்கிறது. அத னால் தேவையான முன்னெச்சரிக்கை எடுத்துக் கொண்டு பாலியல் ரீதியாக ஈடுபாட்டுடன் இருப்பதில் எந்தத் தடையும் இல்லை.
குழந்தைகளைப் பொறுத்தவரை நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ, எந்த வகையான குணத்தைக் காட்டுகிறோமோ அப்படித்தான் அவர்களும் எதிரொலிப்பார்கள். அம்மாவும் அப்பாவும் தாங்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது சிரமமாக இருக்கிறது, என்ன இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பாமல் இருக்க வேண்டும். இது நன்றாக இருக்கிறதே, இந்த சமயத்தில் இதைச் செய்யலாமே என்று ஒரு விடுமுறை போன்று, ஒரு ரிசார்ட்டில் இருப்பது போல் எடுத்துக் கொண்டு பெரியவர்கள் பேசினால் குழந்தைகளும் இயல்பாகி இந்த நீண்ட தனிமையை ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஒரு சிறிய வீட்டுக்குள் ஒரு குழந்தையை அடைத்து வைத்துக்கொண்டு, காக்கா, குருவி பார்க்க முடியாத நிலையில் தள்ளினால் அந்தக் குழந்தைக்குச் சிரமமாக இருக்கும். கொஞ்சம் நடக்கிற அளவுக்கு, உலவுகிற அளவுக்கான பெரிய வீட்டில் குழந்தைகளுக்கு அது பெரிய சிரமமாக இருக்காது. சிறிய வீட்டில் இருக்கும் குழந்தைகள் வெளியே ஓடத்தான் விரும்பும். அதனால் அம்மாக்கள் கோபம் அடையாமல், சிரித்த முகத்துடன் இந்தக் குழந்தைகளைக் கையாள வேண்டும்.
ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் இவர்களை கையாளப்போவது பெண்கள்தான். பெண்கள் தங்களை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
இது மிகவும் இக்கட்டான சூழ்நிலை. நான் என் சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற வேண்டும், இது என்னுடைய பேரரசு, இதைக் காப்பாற்றி எப்படியும் மேலே கொண்டு வர வேண்டும் என்ற தலைமைப் பண்பு கொண்ட மன நிலையோடு பெண்கள் இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும்.
நான் கையறு நிலையில் இருக்கிறேன், என்ன செய்வது என்று தெரியவில்லை, நான் வந்து மாட்டிக்கொண்டேன் என்று பெண்கள் உணர்ந்தால் அவர்களுக்கு மன அழுத்தம் வந்துவிடும். அடிக்கடி கோபம் அடைவது, சட்டென்று எரிந்து விழுவது, குழந்தைகளை அடித்து விடுவது போன்று செயல்களில் பெண்கள் ஈடுபட்டுவிடுவார்கள். அப்படி இல்லாமல் நான் அரசி என்ற மன நிலையில் பெண்கள் இருப்பது அவசியம்.
பெண்களுக்கு இது புதிதான விஷயம். பெண்களை யாரும் அரசி என்று சொல்ல மாட்டார்கள். அதிகபட்சம் ஒரு இளவரசி என்று வேண்டுமானாலும் சொல்வார்கள். அரசி என்ற மன நிலை இருந்தால்தான் இந்த இறுக்கத்திலிருந்து பெண்கள் வெளியே வர முடியும். ஒரு அரசியின் மன நிலையில் மற்றவர்களுக்கு வழி காட்டும் மனப்போக்கு பெண்களுக்கு அவசியம். இப்படித்தான் பெண்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது நம்முடைய சுயநலத்திற்காக, நம்முடைய சந்ததியினருக்காக என்று பெண்கள் நினைக்க வேண்டும். இப்படிச் செய்தால் நம் குடும்பம் நன்றாக இருக்கும் என்று பெண்கள் நினைக்க வேண்டும். இதைப் புரிந்துகொண்டு உத்தியாக பெண்கள் நடந்துகொள்ள வேண்டும்.
இதைவிட மிகவும் இறுக்கம் அடைபவர்கள் முதியவர்கள்தான். அவர்கள் தங்களுக்கென்று ஒரு வழக்கம் வைத்திருப்பார்கள். ஒரு சிறு மாற்றம் கூட அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது. எல்லாமே மாறுவது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். அவர்களுக்கு நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற ரிஸ்க் அம்சங்கள் அதிகம் என்பதால் அவர்கள் சரியாக மருந்து சாப்பிடுகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். அவர்களின் வழக்கங்களுக்குள்ளேயே அவர்களை வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
முதியவர்கள் புலம்பினாலோ, சிடுசிடுத்தாலோ பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர்களைப் பேச விட்டுவிட்டுப் பெரிதாக பதில் சொல்லாமல் அவர்களை நடத்துவது மிக முக்கியம். இப்படி இந்தத் தனிமையை எல்லோரும் எதிர்கொண்டால் மன இறுக்கம் அகன்று அமைதிக்கான வழியைத் தேடலாம்.