திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டத்தின்கீழ் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா பெயர்மாற்றம், சாதிசான்றிதழ், நிலஅளவீடு உள்ளிட்ட பணிகளுக்காக பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தையே அணுக வேண்டும். இந்தநிலையில், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த செல்வம் மீது முறைகேடு புகார் எழுந்தது. இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் புதிய வருவாய் கோட்டாட்சியராக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து இதுவரை புதிய கோட்டாட்சியர் காயத்ரி பொறுப்பேற்றுக்கொள்ளாததால், டாஸ்மாக் நிர்வாக அலுவலரான பரமேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பாக பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் பணியும் வழங்கப்பட்டது. ஆனால், பரமேஸ்வரி வாரத்தில் ஒருநாள் கூட பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வராததால், பொதுமக்கள் அளித்த மனுக்கள் தொடர்பான கோப்புகள் தேங்கி நிக்கிறது. இதனால் அந்தபகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே பொன்னேரி வருவாய் கோட்டாட்சியராக இருந்த செல்வம் அமைச்சர் ஒருவருக்கு வேண்டியவர் என்று சொல்லப்படுகிறது. இதனால், மீண்டும் செல்வத்தையே பொன்னேரி வருவாய் கோட்டாட்சியராக நியமனம் செய்ய மறைமுக வேலைகள் நடைபெறுவதாகவும், அதன் காரணமாகவே புதிய கோட்டாட்சியராக நியமிக்கப்பட்ட காயத்ரியை இன்னும் பொறுப்பேற்கவிடாமல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுப்பதாகவும் அந்தபகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.