இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். டிடிவி தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இருவரிடமும் தனித்தனி அறையில் விசாரணை நடைபெற்ற நிலையில் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது என்றும் அது யார் என்று தனக்கு தெரியவில்லை எனவும் கூறினார். மேலும் இந்த வழக்கைப் பொறுத்தவரை தான் நிரபராதி எனவும் தெரிவித்தார்.