திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி(28) கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அடுத்த தும்பூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா(20) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நல்லதம்பி சரியாக வேலைக்கு செல்லாமல், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இந்தநிலையில் வழக்கம்போல, இன்று காலை பவித்ரா, தனது கணவரிடம் வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதற்கு நல்லதம்பி மறுத்ததால், மனமுடைந்த பவித்ரா வீட்டில் இருக்கும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பவித்ரா உயிரிழந்த செய்தி அறிந்து வந்த உறவினர்கள் வீட்டில் இருந்த நல்லத்தம்பியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த திருத்தணி காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நல்லதம்பியை மீட்டு திருத்தணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்பு, போலீசார் பவித்ராவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.