திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழாவில் வி.கே.சசிகலா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட சசிகலா சித்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுகவின் எதிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்தார். அதிமுகவிற்கு தலைமையாக தான் இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் முடிவு செய்தால் அதை ஏற்பதாகவும், தமிழகத்தில் அடுத்த ஆட்சி அம்மாவின் ஆட்சி தான் என்றார். அதிமுக தமது தலைமையில் இயங்கும் என்பதில் சந்தேகமில்லை என்றும் கூறினார். திமுக ஓராண்டு ஆட்சி சாதனை குறித்து பேசிய சசிகலா, ஆட்சி செய்யும் முதல்வர் கூறி கொள்ளலாம் ஆனால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்றார். மக்களை பொறுத்தவரையில் இந்த ஓராண்டு ஆட்சியில் திருப்தியாக இல்லை என கூறினார். கடந்த ஓராண்டு ஆட்சியில் மக்கள் மட்டுமல்லாது கடவுளுக்கும் பிரச்சினை, கஷ்டம் என தெரிவித்தார். கோவில் விவகாரங்களில் அரசு தலையிடுவது நல்லதல்ல என்றும் எடுத்துரைத்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பல்வேறு நடைமுறைகள், பணிகள் குறித்து தெரிவித்த சசிகலா அறநிலையத்துறை அமைச்சராக இருந்தால் மட்டும் போதாது எனவும் நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். திராவிட மாடல் எனக்கூறி ஆட்சி நடத்திக்கொள்ளலாம் என்றும் ஆனால் கோவில் நடைமுறைகளை அரசு மாற்றக்கூடாது என்றார். ஓராண்டு கால ஆட்சி என்பது சாதனையல்ல எனவும் வேதனை என்று தான் தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாகவும் அதனை நீங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள் என கூறினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தவறா என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, அவ்வாறு தான் கூறவில்லை, ஆனால் கோவிலில் உள்ள நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்றார். கோவில்களுக்கு உள்ளே சென்று அரசியல் செய்ய வேண்டாம் என்பது தான் தமது எண்ணம் எனவும் அதனை அவர்கள் திருத்தி கொள்ள வேண்டும் என்றார். மேலும் நிலக்கரி தொடர்பாக முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாக சசிகலா குற்றம் சாட்டினார். விளம்பரம் மட்டுமே ஆட்சியை கொடுத்து விடாது எனவும் மக்களை திருப்தியாக வைத்திருக்க வேண்டும் எனவும் அனைத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும் என்றார். பெண்களுக்கு இலவச பேருந்து என அறிவித்துள்ள நிலையில் வேலைக்கு செல்லும் நேரத்தில் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுறும் பெண்கள் குறைந்த கட்டணத்திலாவது சரியான நேரத்திற்கு பேருந்துகளை இயக்குமாறு கோரிக்கை வைத்து வருவதாக தெரிவித்த சசிகலா ஆளும் அரசு அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.