பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. ரிப்பன் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்க, துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் வரும் நடப்பு நிதி ஆண்டான 2022-23 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ள வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இக்கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையை, வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவர் சர்பஜெயதாஸ் தாக்கல் செய்யவுள்ளார். ‘பட்ஜெட்டில்’ சொத்து வரி குறித்த புதிய அறிவிப்புகள், வருவாய் அதிகரித்தல், மக்கள் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதமும் இன்று மதியம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளதால், இந்த பட்ஜெட்டில் இடம்பெரும் அறிவிப்புகளில் பெரும்பான்மையானவை ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.