சீனாவில் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், கடந்த 5ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரேநாளில் சுமார் 24,659 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அங்கு ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். உணவு, மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் முற்றிலும் தடைபடும் நிலைக்கு சென்றது. இதனால் கோபமுற்ற மக்கள், தங்கள் வீடுகளில் இருந்தபடியே தெருவில் நிற்கும் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதற்கிடையில், சீனா மக்களின் அவல நிலை குறித்து உலக நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து ஷாங்காய் நகரில் ஊரடங்கில் சில தளர்வுகளை சீன அரசு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்று குறைந்த பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.