வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்களுக்கான பயிற்சி மையத்தில் டெல்லி, அருணாச்சலபிரதேசம், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகளுக்கான துணை கண்காணிப்பாளர்கள், துணை ஜெயிலர்களுக்கான 27ஆவது பேட்ஜ் பிரிவின் 9 மாதகால அடிப்படை பயிற்சிகள் நடைபெற்றது. இந்த பயிற்சியின் இறுதி விழாவான இன்று அதிகாரிகளின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுகொண்ட தெலங்கானா மாநில சிறைத்துறை தலைவரும், ஏடிஜிபியுமான டாக்டர் ஜித்தேந்தர், பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் சிறந்த ஆல்ரவுண்டராக டெல்லியின் அனுஜ் துணை கண்காணிப்பாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில், டெல்லி சூப்பிரண்டண்ட் தேவேந்திர குமார், வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறைத்துறை தலைவர் டாக்டர். ஜித்தேந்தர் பேசுகையில், ”உங்கள் அனைவருக்கு தெரியும், சிறை நிர்வாகம் என்பது சவால்கள் நிறைந்தது. அதில், சட்டம் ஒழுங்கை சிறையில் பாதுகாப்பது மேலும் சவால்கள் நிறைந்தது. நீங்கள் இந்த சவாலை சாதாரணமாக ஏற்றுகொண்டால் வெற்றி பெறலாம். சிறையில் இருக்கும் அனைவரும் இந்த சமூகத்தினால் குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், சிறையிலிருந்து கைதிகள் விடுதலையாகி வெளியில் செல்லும்போது சமூகம் அவர்களை ஏற்றுகொள்ளும் வகையில் மாற்ற வேண்டும். சிறை கைதிகளுக்காக சிறையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சிறையில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறை கைதிகளுக்கு மனநிலை சார்ந்த பயிற்சிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஆதரவோடு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தெலங்கானா சிறை மேம்பாடு என்ற உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சிறையில் கைதிகள் தொழில் திறனை மேம்படுத்த பல்வேறு சர்வதேச தொழில் நிறுவனங்களுடன் தெலங்கானா சிறை நிர்வாகம் ரூ.200 கோடிக்கு சிறை கைதிகளுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக” அவர் கூறினார்.