கேரளாவில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் தலா 5 பேர் கொண்ட இரண்டு குழுவினர் காஞ்சிபுரம் மாநகராட்சியில் சோதனை நடத்தினர். அந்த குழு ரங்கசாமி குளம், காவலன் கேட், கீரை மண்டபம், காமாட்சி அம்மன் சன்னதி வீதி உள்ளிட்ட 13 இடங்களில் இயங்கும் ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஷவர்மா விற்கும் கடைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கோழி கறிகள் பழைய கோழி கறியே பயன்படுத்துகிறார்களா? மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து சோதனையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தி ஷவர்மா தயாரிக்கும் 10 கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் இயங்கும் ஷவர்மா கடையில் பழைய கோழி கறியை பயன்படுத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரிகளை சேகரித்து கிண்டியில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் என்று கடைகடையாக சென்று ஆய்வு மேற்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.