குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக மருத்துவக் குழுவின் விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியதால், அந்த கை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், குழந்தைக்கு சிகிச்சைஅளித்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து குழந்தையின் நிலை குறித்து அதன் பெற்றோரிடம் தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, விசாரணை அறிக்கையை மருத்துவர்கள் குழு, அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள 7 முக்கிய குறிப்புகளின் விவரம்:
• குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனே கால தாமதம் இன்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
• Venflon ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர்களின் வாக்குமூலம் மற்றும் மருத்துவர்களின் வாக்கு மூலம் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
• மருந்து கசிவினால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
• குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிறமாற்றம் ஏற்பட்ட பின்னர் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து உள்ளனர்.
• குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார்.
• ரத்த நாள அடைப்பு சிகிச்சை முறைகளாலோ, செலுத்தப்பட்ட மருந்தினாலோ ஏற்படவில்லை.
• Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத் தொற்று ரத்த நாளத்தை பாதித்த காரணத்தால் குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டு (Arterial Thrombosis) உயிரை காப்பாற்றும் முயற்சியில் வலது கையை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.