அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து ‘ஜாம்பவான்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மறைந்த மாரடோனா, 1986ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பை வென்று தந்தார். இதுவரை 4முறை உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள மாரடோனா 1986ஆம் ஆண்டு நடந்த கால்ப்பந்தாட்டத் தொடரின் காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக, 55 வது நிமிடத்தில் 60 மீ., துாரத்தில் இருந்து ஐந்து இங்கிலாந்து வீரர்களை கடந்து சென்று ‘சூப்பர்’ கோல் அடித்தார். இது அந்த நுாற்றாண்டின் சிறந்த கோலாக போற்றப்பட்டது. இந்தநிலையில், அந்த சூப்பர் கோல் அடிக்கும் போது மாரடோனா அணிந்திருந்த ஜெர்சி கடந்த 20 ஆண்டுகளாக இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள தேசிய கால்பந்து மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த 10 என்ற எண் கொண்ட ‘ஜெர்சி’, தற்போது ஏலம் விடப்பட உள்ளது. இணையதள வழியில் நடக்கவுள்ள இந்த ஏலம், வரும் 20ல் தொடங்குகிறது. இதில் ரூ. 40 கோடி முதல் ரூ. 60 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.