இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா குறிப்பிட்ட சில ஆண்டுகளாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், வருமான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை வருமான வரித் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் 2015ஆம் ஆண்டு ஆறு வழக்குகள் தொடரப்பட்டது. இதனையடுத்து, வருமான வரித்துறை தொடர்ந்து, நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களில், ’குறிப்பிட்ட நிதியாண்டுகளின் வருமான வரிக் கணக்குகள் மறுமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும்’ என்று எஸ்ஜே சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு, ‘வருமான வரித்துறை தரப்பில் முறையான சோதனை நடத்தி, வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டப்பின்தான் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது’. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.சந்திரசேகரன், பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே சூர்யா இந்த வழக்குகளை எதிர்கொள்ளதான் வேண்டும் எனக் கூறி வழக்களை ரத்து செய்யக் கோரிய அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.