உலக தலைவர்கள் நாம் பேசுவதை கேட்பது போன்று நடிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் நமது பேச்சை கேட்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.சுற்று சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்.
பொது மேடைகளிலும், மாநாடுகளிலும் தனது கருத்துக்களை மிகவும் வெளிப்படையாக பேசி வருகிறார் கிரேட்டா தன்பெர்க். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக தலைவர்கள் அக்கறை இன்றி செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் இவர், தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில், பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அளவில் இளைஞர்கள் பங்கேற்கும் சுற்று சூழல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றம், உலகம் வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய கிரேட்டா தன்பெர்க் “இது போன்ற மாநாடுகளை நடத்துவதன் மூலம் இளம் தலைமுறையினரின் கோரிக்கைகள் கேட்கப்படுவதாக உலக தலைவர்கள் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் நமது பேச்சை கேட்பது இல்லை.அவர்கள் கேட்பது போல் நடிக்கிறார்கள்.நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம்.ஆனால் நடவடிக்கை என்பது குறைந்தே காணப்படுகிறது.நாளுக்கு நாள் புவி வெப்பமயமாதல் பருவநிலைமாற்றம் போன்ற பிரச்னைகளை அதிகரித்தவாறே உள்ளன.
அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.மனிதர்கள் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமி தான் இருக்கிறது. இன்னொரு பூமி இல்லை. மனிதர்கள் வாழத் தகுதியுடைய இன்னொரு கோள் இதுவரை கண்டறியப்படவில்லை. அதனால் நமக்கு இருக்கும் ஒரே வழி இப்போது நாமிருக்கும் இந்த பூமியை பாதுகாப்பது மட்டுமே. அதைச் செய்வோம். உலகத் தலைவர்கள் அனைவரும் அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுங்கள்” என்று கிரேட்டா தன்பெர்க் ” பேசியுள்ளார்.