சென்னை மீஞ்சூரை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவி. கணவனை இழந்த இவருக்கு பிரவீன் உதயன்(13) என்ற மகனும், அபர்ணா(10) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்தபகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்துவருகின்றனர். இதில், ஆறாம் வகுப்பு படித்து வரும் சிறுமி அபர்ணா முறைப்படி குத்துச்சண்டை பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நேபாளத்தில் நடைபெற்ற 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிலிருந்து சிறுமி அபர்ணா உள்ளிட்ட 52 பேர் பங்கேற்றனர். அங்கு குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்ற அபர்ணா வெள்ளி மற்றும் தங்கப்பதக்கம் வென்று தாயகம் திரும்பியுள்ளார். இத்துடன், இளம் வீராங்கனை அபர்ணா ஜூலை மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளார். ஆனால் அதற்கான பொருளாதார வசதி தங்களிடத்தில் இல்லாததால் விளையாட்டை ஊக்குவிக்கும், தன்னார்வலர்களும் தமிழக அரசும் தனக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்தப்போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் வருங்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதற்கான வாய்ப்பு தனக்கு ஏற்படும் எனவும் அபர்ணா தெரிவித்துள்ளார்.