தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் மே 10ஆம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறுகின்றது. தினந்தோறும் கேள்வி நேரம், 110ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள், மானியகோரிக்கை மீது அமைச்சர்கள் பதிலுரை ஆகியவை இடம் பெறுகின்றன. முதல் நாளான இன்று நீர்வளத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்த விவாதங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் அவையில் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் மட்டும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.